கண்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள்: பார்வை மங்கிய சீன நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
சீனாவைச் சேர்ந்த 35 வயது நபரின் கண் இமைகளில் ஆயிரக்கணக்கான டெமோடெக்ஸ் பூச்சிகள் கண்டறியப்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவின் ஹூபே (Hubei) மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது யூ (Yu) என்பவருக்கு ஏற்பட்ட விசித்திரமான கண் பிரச்சனை மருத்துவர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
யூவுக்கு சில நாட்களாக கண்களில் அசௌகரியம், எரிச்சல் மற்றும் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தியும் எந்த மாற்றமும் இல்லாததால், அவர் கண் பரிசோதனைக்குச் சென்றார்.
பரிசோதனையின் போது, அவருக்கு டெமோடெக்ஸ் பிளெபரைட்டிஸ் (Demodex blepharitis) எனப்படும் கண் இமை அழற்சி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவர்கள் கூறியதன்படி, டெமோடெக்ஸ் (Demodex) எனப்படும் மிகச் சிறிய பூச்சிகள் அவரது கண் இமைகளின் முடிப்பகுதியில் அதிக அளவில் காணப்பட்டன. இந்த நுண்ணுயிர்கள் கண் இமைகளில் வீக்கம், எரிச்சல் மற்றும் வறட்சியை ஏற்படுத்தியிருந்தன.
பரிசோதனையில், யூவின் ஒவ்வொரு கண் இமை முடிப்பகுதியிலும் பல டெமோடெக்ஸ் பூச்சிகள் இருப்பது தெரியவந்தது. சில முடிகளில் எட்டு முதல் ஒன்பது வரையிலான பூச்சிகள் நகர்ந்து கொண்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அவரது கண்கள் வறண்டு போனதுடன், தொடர்ந்து எரிச்சல் மற்றும் பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டன.
டெமோடெக்ஸ் பூச்சிகள் பொதுவாக மனிதர்களின் தோல் மற்றும் முடி வேர்களில் மிகக் குறைந்த அளவில் காணப்படலாம். ஆனால் அவை அதிகமாக பெருகும்போது கண் இமை அழற்சி உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கண் எரிச்சல், தொடர்ந்து அரிப்பு, கண் இமை வீக்கம் அல்லது பார்வையில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுகுவது முக்கியம்.