5 மணிக்கு நடக்கப் போகும் தரமான சம்பவம்.. மேட்ச் நடக்குமா இல்லையா என்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, மழை காரணமாக பாதிக்கப்படுமா என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
கொழும்பில் இன்று (பிப்ரவரி 15) நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை இந்தியா–பாகிஸ்தான் மோதலைச் சுற்றி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, மழை காரணமாக பாதிக்கப்படுமா என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
பல அரசியல் சர்ச்சைகள் மற்றும் நீண்டகால எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாட சம்மதித்த நிலையில், இப்போது இயற்கை போட்டிக்குத் தடையாக அமையுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக மாலை 5 மணி நேரத்தை இலங்கை வானிலை மையம் முக்கியமாக சுட்டிக்காட்டியுள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி கொழும்பில் வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, மழை பெய்யும் வாய்ப்பு சுமார் 90 சதவீதம் வரை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நகரில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் ஈரப்பதமும் 90 சதவீதத்தை எட்டியுள்ளது.
வானிலை கணிப்பின்படி மாலை 5 மணியளவில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம். போட்டி தொடங்குவதற்கு முன்போ அல்லது தொடக்க நேரத்திலோ மழை பெய்தால், மைதானம் ஈரமாகி தயாரிப்பில் தாமதம் ஏற்படலாம். இதனால் டாஸ் தாமதமாகலாம் அல்லது ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக மாறும் சாத்தியமும் உள்ளது.
எனினும் இரவு நேரத்தில் வானம் ஓரளவு தெளிவாக இருக்கும் என்றும், வெப்பநிலை சுமார் 27°C அளவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே மழை குறுக்கிட்டாலும், போட்டி முழுமையாக ரத்து செய்யப்படாமல் குறைக்கப்பட்ட ஓவர்களுடன் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேகமூட்டமும் அதிக ஈரப்பதமும் காரணமாக இன்று கொழும்பு ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். பந்து நன்றாக ஸ்விங் ஆகும் வாய்ப்பு உள்ளதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யலாம். தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடுவது முக்கியமாக இருக்கும்.
இதற்கிடையில் இந்திய அணியிலும் சிறிய கவலை நிலவுகிறது. வயிற்றுத் தொற்று காரணமாக அவதிப்பட்ட அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முழு உடற்தகுதியுடன் உள்ளாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. அவர் விளையாடினால் இந்திய அணியின் பலம் அதிகரிக்கும். அதேபோல் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க இந்திய நடுவரிசை பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
