IND vs PAK: உலகக்கோப்பை பைனலில் இந்தியா – பாகிஸ்தான் மோதினால் என்ன செய்வீர்கள்? – கெவின் பீட்டர்சன் கேள்வி

ஒருவேளை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவானால், அப்போதும் பாகிஸ்தான் விளையாடாமல் விலகுமா என்ற கேள்வியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் Kevin Pietersen எழுப்பியுள்ளார்.

IND vs PAK: உலகக்கோப்பை பைனலில் இந்தியா – பாகிஸ்தான் மோதினால் என்ன செய்வீர்கள்? – கெவின் பீட்டர்சன் கேள்வி

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த முடிவு சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒருவேளை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவானால், அப்போதும் பாகிஸ்தான் விளையாடாமல் விலகுமா என்ற கேள்வியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் Kevin Pietersen எழுப்பியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பைத் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் நடைபெற இருந்த இந்தியாவுக்கு எதிரான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் மட்டும் களமிறங்க வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அரசு ஒப்புதல் அளிப்பதாகவும், ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் பங்கேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து வங்கதேச அணி தங்களின் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றக் கோரியிருந்தது. ஆனால் அந்த கோரிக்கையை International Cricket Council நிராகரித்ததைத் தொடர்ந்து, வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஐசிசி இரட்டை நிலைப்பாடு கடைப்பிடித்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்தே இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.

பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவுக்கு எதிராக பல முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கெவின் பீட்டர்சன் தனது எக்ஸ் பதிவில், இந்த உலகக்கோப்பையின் குரூப் மற்றும் பிளேஆஃப் அமைப்புகளைப் பொறுத்தவரை இந்தியா – பாகிஸ்தான் இறுதிப் போட்டி சாத்தியமா என்பது தெளிவில்லை என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அப்படி ஒரு சூழல் உருவானால், உலகக்கோப்பை பைனலையும் பாகிஸ்தான் புறக்கணிக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வி, பாகிஸ்தானின் முடிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை வெளிச்சம் போடுவதோடு, கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்காவிட்டால், ஐசிசி விதிகளின்படி அந்தப் போட்டி இந்திய அணிக்கு வழங்கப்பட்டு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். இது இந்திய அணிக்குச் சாதகமாக இருந்தாலும், கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடைபெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.