கிரிக்கெட் உலகில் அரிய நிகழ்வு... ஒரே பந்தில் 9 ரன்கள் விட்டு கொடுத்த இந்தியா! நோ பால், Wide கிடையாது!

ஐசிசி யு-19 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது, கிரிக்கெட் வரலாற்றில் அரிதாக நிகழும் வினோத சம்பவம் ஒன்று நடந்தது.

கிரிக்கெட் உலகில் அரிய நிகழ்வு... ஒரே பந்தில் 9 ரன்கள் விட்டு கொடுத்த இந்தியா! நோ பால், Wide கிடையாது!

ஐசிசி யு-19 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது, கிரிக்கெட் வரலாற்றில் அரிதாக நிகழும் வினோத சம்பவம் ஒன்று நடந்தது. இந்தப் போட்டியில் ஒரே பந்தில் ஆப்கானிஸ்தான் அணி 9 ரன்கள் பெற்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் மஹ்பூப் கான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, 17வது ஓவரில் இந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. அந்த ஓவரை இந்திய அணியின் தேவேந்திரன் வீசினார். முதல் ஐந்து பந்துகளில் அவர் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.

ஆனால் கடைசி பந்தில் ஆட்டத்தின் போக்கு மாறியது. பேட்ஸ்மேன் ஃபைசல் ஷினோஜாதா லெக்-சைடு ஷாட் அடிக்க முயன்றபோது பந்தை தவறவிட்டார். பந்து விக்கெட் கீப்பர் அபிகியான் குண்டுவிடம் சென்றாலும், அவரால் பந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் பந்து தரையில் வைக்கப்பட்டிருந்த ஃபீல்டிங் அணியின் ஹெல்மெட்டில் பட்டு பவுண்டரி நோக்கி உருண்டது.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐந்து அபராத ரன்களும், பவுண்டரிக்கான நான்கு ரன்களும் சேர்த்து மொத்தம் ஒன்பது ரன்கள் வழங்கப்பட்டன. எம்.சி.சி விதி 28.3.2 படி, ஃபீல்டிங் அணியால் தரையில் வைக்கப்பட்டுள்ள ஹெல்மெட்டை பந்து தாக்கினால் பேட்டிங் அணிக்கு ஐந்து அபராத ரன்கள் வழங்கப்பட வேண்டும். ஹெல்மெட்டைத் தாக்குவதற்கு முன் எடுக்கப்பட்ட ரன்களும் இதில் சேர்க்கப்படும்.

இச்சம்பவத்தில் பந்து ஹெல்மெட்டைத் தாக்கியவுடன் அது ‘டெட் பால்’ ஆக கருதப்பட வேண்டுமென சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு பிறகும் பவுண்டரி வழங்கப்பட்டிருப்பது குறித்து இந்திய ரசிகர்கள் சர்ச்சை எழுப்பியுள்ளனர். இந்த போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது.

இந்திய யு-19 அணியில் கேப்டன் ஆயுஷ் மகாத்ரே தலைமையில் ஆரன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, அபிகியான் குண்டு, வேதாந்த் திரிவேதி, ஆர்.எஸ். அம்ப்ரீஷ், கனிஷ்க் சவுகான், கிலான் படேல், ஹெனில் படேல் மற்றும் தீபேஷ் தேவேந்திரன் ஆகியோர் விளையாடினர். ஆப்கானிஸ்தான் அணியில் மஹ்பூப் கான், உஸ்மான் சதத், காலித் அகமத்சாய், ஃபைசல் ஷினோஜாதா, உசைருல்லா நியாயாசி, அஜிசுல்லா மியாகில், காதிர் ஸ்டானிக்சாய், அப்துல் அஜிஸ், ருஹுல்லா அரப், நூரிஸ்தானி உமர்சாய் மற்றும் வாஹீதுல்லா ஜாதாரன் ஆகியோர் இடம்பெற்றனர்.