டி20  தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்துவார் - கங்குலி நம்பிக்கை!

கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்ணீர் விட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்து வருகிறார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
டி20  தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்துவார் - கங்குலி நம்பிக்கை!
(Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் சொந்த மண்ணில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து கோப்பையை நழுவ விட்டது.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சீனியர் வீரர்கள் என்பதற்கு அடையாளமாக மிகச் சிறப்பாக விளையாடினார்கள். ரோகித் சர்மா தன்னுடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் இறுதிப்போட்டி உட்பட பெரும்பாலான போட்டிகளில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து வெற்றிகளில் பங்காற்றினார்.

இருப்பினும் கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்ணீர் விட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்து வருகிறார். இதை தொடர்ந்து நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வெடுக்கும் அவர் டெஸ்ட் தொடரில் மட்டுமே கேப்டனாக செயல்பட உள்ளார். 

முன்னதாக 2022 டி20 உலகக் கோப்பையில் பேட்டிங்கில் சுமாராகவே விளையாடிய ரோஹித் சர்மா இந்தியாவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். அதன் காரணமாக அவரை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையில் புதிய அணியை களமிறக்கும் முடிவை பிசிசிஐ மறைமுகமாக கையிலெடுத்துள்ளது. 

இதனால் இன்னும் 6 மாதத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவர் சாதாரண வீரராக கூட விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக இந்தியாவை வழி நடத்திய ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையிலும் தொடர்ந்து கேப்டனாக செயல்பட வேண்டும் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் - வீரர்களின் விலை பட்டியல் வெளியானது... குறைந்த விலை கேட்டுள்ள அதிரடி வீரர்!

இதுகுறித்து பேசிய அவர், “கேப்டனாக செயல்படுவதற்கு நிறைய வீரர்கள் இருப்பது ஒரு பிரச்சனையாகும். டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் முக்கியமற்றவர். மேலும் ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாட விரும்புகிறார். 

ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல ரோஹித் சர்மா 3 வகையான கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வரும் போது அவர் இந்தியாவின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட வேண்டும். ஏனெனில் அவர் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே குறைந்தபட்சம் அவர் அடுத்த டி20 உலகக் கோப்பை வரை இந்தியாவின் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறேன்” என கூறினார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.