'நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது'

Key Points
  • நாட்டில் நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார சவால்களை சமாளிக்க அரசாங்கம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அ...
'நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது'

நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது

நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காக அரசாங்கம் உச்சகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று (17) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

உலகளாவிய ரீதியில் எந்த அளவுக்கு யுத்த நிலைமை உருவானாலும் இலங்கை தனது நடுநிலை வெளிநாட்டு கொள்கையிலிருந்து விலகாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் சில எரிபொருள் வழங்குநர்கள் கப்பல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தாலும், நட்பு நாடுகளுடன் முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் மூலம் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து புதிய விநியோகஸ்தர்களிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் டொலர்களில் வருமானம் ஈட்டும் தனியார் ஏற்றுமதி தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை சங்கங்களின் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்கு தேவையான எரிபொருளை தாங்களே இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதன்படி நாளை முதல் தனியார் துறையின் மூலம் சுற்றுலாத்துறைக்கும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் தேவையான எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியளித்த ஜனாதிபதி, மார்ச் மாதத் தேவையான 330000 டன்களுக்கு மேலதிகமாக 380000 டன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 33000 டன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் நாளை அல்லது நாளை மறுநாள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் சுகாதார சேவை, விமான நிலையம் மற்றும் துறைமுகம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்காக பாதுகாப்பு எரிபொருள் இருப்புகளை பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெருந்தோட்டத் துறையில் தேயிலைத் தோட்டப் பயன்பாடுகளுக்கு QR முறைமையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு போதாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் உணவு மற்றும் மரக்கறி விநியோகஸ்தர்களுக்கான எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் எரிபொருள் பயன்பாட்டை குறைந்தது 25 சதவீதம் குறைக்கும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நெருக்கடி நிலை உருவாகாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google