செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு மீட்பு: மொத்த எண்ணிக்கை 446 ஆக உயர்வு
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 446 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 429ஆம் இலக்க எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டப் பணிகளின் 37ஆம் நாள் அகழாய்வு நடவடிக்கைகள் இன்று (19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழாய்வின் போது மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து, செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 434 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து மீட்கப்பட்டுள்ளன.

இன்றைய அகழாய்வில் 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வின் போதும் இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு கண்டறியப்படுவது இரண்டாவது முறையாக பதிவாகியுள்ளது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான அகழாய்வு நடவடிக்கைகள் நீதிமன்ற மேற்பார்வையுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.