சீரற்ற காலநிலை: ஆறு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா, இரத்தினபுரி, காலி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, காலி மாவட்டத்தின் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை மற்றும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற மற்றும் நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களும் மண்சரிவு அபாயம் குறித்து விழிப்புடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.