இறந்துவிட்டதாகக் கருதி இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் இரண்டு மாதங்களின் பின் உயிருடன் மீண்ட விநோதம்

அனுராதபுரம் கொக்காவெவ பகுதியில் சடலம் தவறாக அடையாளம் காணப்பட்டு அடக்கம் மற்றும் தானச் சடங்குகள் செய்யப்பட்ட நபர் இரண்டு மாதங்களின் பின் உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.


இறந்துவிட்டதாகக் கருதி இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் இரண்டு மாதங்களின் பின் உயிருடன் மீண்ட விநோதம்
AI உருவாக்கிய மாதிரிப்படம்

அனுராதபுரம் கொக்காவெவ பொலிஸ் பிரிவில் உயிரிழந்துவிட்டதாகக் கருதி இறுதிக்கிரியைகள் மற்றும் ஆத்மசாந்தி தானங்கள் செய்து முடிக்கப்பட்ட நபரொருவர், இரண்டு மாதங்களின் பின்னர் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் வீட்டை விட்டுச் சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரது மனைவி இது தொடர்பாக கொக்காவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காப்பகப் பகுதியில் நஞ்சருந்தி உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அச்சடலத்தில் காணப்பட்ட ஆடைகள், புத்தாண்டுக்கு மகன் வாங்கிக் கொடுத்த ஆடைகளுடன் ஒத்துப் போனதால், அது தனது கணவரின் சடலம் தான் என மனைவியும் உறவினர்களும் தவறாக அடையாளம் காட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் திகதி பொலன்னறுவையில் அச்சடலம் அடக்கம் செய்யப்பட்டு, கடந்த 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் மரணத்திற்கான தானச் சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில், உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நபர் திடீரென தனது சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைக் கண்டு திகைப்படைந்த குடும்பத்தினர் உடனடியாக கொக்காவெவ பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த விசித்திர நிகழ்வை அடுத்து, ஏற்கனவே நல்லடக்கம் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத நபரின் சடலம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google