சவூதியில் மகனுக்கு மரண தண்டனை: காப்பாற்றி அழைத்து வரக்கோரி அம்பாறை தாய் உருக்கமான வேண்டுகோள்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுவித்து, தாயகம் அழைத்து வர உதவுமாறு அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் குற்றச்சாட்டு ஒன்றில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவித்து, தாயகம் அழைத்து வர உதவுமாறு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் தாய் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக இந்த விவகாரத்தில் அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆரம்பக்கட்டத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த மேன்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள அனோஜனின் தாய், தனது மகனை இந்தத் தண்டனையிலிருந்து காப்பாற்றி, பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர உரிய தரப்பினர் உதவ வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.