பாடசாலைகளுக்கும் வாரந்தோறும் புதன்கிழமை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்தில் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நேற்று அரச ஊழியர்களுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எரிசக்தி தேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் அமைச்சர்கள் மற்றும் அமைச்சக செயலாளர்கள் கலந்து கொண்டு, நாட்டின் எரிசக்தி முகாமைத்துவம், பொருளாதார செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், நாளை (17) முதல் மறு அறிவித்தல் வரும் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை கீழ்கண்ட துறைகளுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்:
- பாடசாலைகள்
- பல்கலைக்கழகங்கள்
- நீதித்துறை
ஆனால் கீழ்க்கண்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை நடைமுறைக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது:
- சுகாதார சேவைகள்
- துறைமுக சேவைகள்
- நீர் வழங்கல்
- சுங்க சேவைகள்
நாட்டின் தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவையால் 4 பிரதான குழுக்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுக்கள் நாட்டின் பொருளாதாரம், எரிசக்தி மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தவுள்ளன.
