தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு

காபூலில் உள்ள மறுவாழ்வு மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகின்ற நிலையில், பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.


தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வான்வழித் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.

ஆப்கானிஸ்தான் தரப்பின் தகவலின்படி, தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலில், காபூலில் உள்ள பெரிய மறுவாழ்வு மருத்துவமனை மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடந்ததாக கூறினார். சுமார் 2,000 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனை வளாகத்தின் பெரும்பகுதி சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனை வளாகத்தில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும், காபூலின் முக்கிய பகுதிகளில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தலீபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலீபான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார்.

இந்த தாக்குதலில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நோயாளிகள் பலர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். மனிதாபிமான கொள்கைகளுக்கு எதிரான செயல் எனவும், இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக கருதப்பட வேண்டும் எனவும் தலீபான் அரசு தெரிவித்துள்ளது.

மறுபுறம், பாகிஸ்தான் அரசு இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. காபூல் மற்றும் நங்கர்ஹார் பகுதிகளில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகளையே துல்லியமாக இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பதாக குற்றம்சாட்டி, அந்த முகாம்களை அழிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. சர்வதேச சமூகங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு பதற்றத்தை குறைக்க வேண்டுமென பல தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google