ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆனேன் – கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கத் தொடக்கத்தில் தயக்கம் இருந்ததாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆனேன் – கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கத் தொடக்கத்தில் தயக்கம் இருந்ததாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2024 ஜூலை மாதத்தில் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அந்த நேரத்தில் தமக்கு முன் பயிற்சியாளர் அனுபவம் இல்லாததால், அவரது நியமனம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து சமீபத்திய நேர்காணலில் கம்பீர் பேசுகையில், 2024 ஐபிஎல் தொடரின் போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டிக்காக மும்பையில் தங்கியிருந்தபோது, அதிகாலையில் ஜெய் ஷா தமக்கு அழைத்ததாக அவர் கூறினார்.

அப்போது “உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரப் போகிறேன்; அதை நீங்கள் மறுக்க முடியாது” என்று ஜெய் ஷா கூறியதாக கம்பீர் தெரிவித்தார். அதற்கு ஆச்சரியப்பட்டு என்ன வாய்ப்பு என்று கேட்டபோது, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்ததாகவும் கம்பீர் கூறினார்.

அந்த நேரத்தில் தாம் அந்த பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்றும், இது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் விளக்கினார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பது மிகப் பெரிய கௌரவம் என்றும், மீண்டும் டிரஸ்ஸிங் ரூமில் சென்று இந்திய ஜெர்ஸியை அணிந்து நாட்டிற்காக பணியாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்றும் கம்பீர் கூறினார்.

பின்னர் குடும்பத்தினருடன், குறிப்பாக தனது மனைவி நடாஷாவுடன் ஆலோசித்து இந்த பொறுப்பை ஏற்க முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். தன்னை நம்பி இந்த பொறுப்பை வழங்கிய ஜெய் ஷாவுக்கு நன்றி தெரிவிக்காமல் இருக்க முடியாது என்றும் கம்பீர் குறிப்பிட்டார்.

மேலும், தாம் எந்த அணிக்கும் முன்பு தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனுபவம் இல்லாததை நன்கு அறிந்திருந்ததாகவும், இதுவரை ஒரு வழிகாட்டியாக மட்டுமே செயல்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும் இத்தகைய பெரிய பொறுப்பில் தன்னை நம்பியமைக்கு ஜெய் ஷாவுக்கு அவர் நன்றியை தெரிவித்தார்.

தலைமைப் பயிற்சியாளராக இருந்த காலத்தில் சில கடினமான தருணங்களையும் கம்பீர் நினைவுகூர்ந்தார். சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த தொடர் தோல்விகள் தமக்கு மிகவும் வேதனையாக இருந்ததாகவும், அந்த காலத்தை மறக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அந்த தோல்விகளுக்குப் பிறகு தாம் மிகவும் மனஉளைச்சலில் இருந்தபோது ஜெய் ஷா தான் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தைரியம் அளித்ததாகவும் கம்பீர் தெரிவித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு விமான நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது கூட அவர் அழைத்து கவலைப்பட வேண்டாம் என்று கூறியதாகவும் கம்பீர் நினைவுகூர்ந்தார்.

நல்ல காலங்களில் பலர் நினைவில் வைத்துக்கொள்ளாமல் போகலாம். ஆனால் கடினமான நேரங்களில் ஆதரவாக நிற்பவர்களை வாழ்நாளும் மறக்க முடியாது என்றும் கம்பீர் கூறினார்.