QR சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன – மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

QR சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன – மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையில் ஏற்பட்ட பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 10000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் தமக்குரிய QR குறியீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் QR குறியீட்டை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பதிவு செய்யும் போது சிலருக்கு மட்டுமே தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், தற்போது பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும் முயற்சிப்பதன் மூலம் QR குறியீட்டை எளிதில் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

பொதுவாக ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 30000 பேர் புதிதாகப் பதிவு செய்து வருகின்றனர். அந்த நேரத்தில் சிலருக்கு ‘Error’ செய்தி தோன்றலாம். இருப்பினும் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 30000 பேர் வரை பதிவு செய்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய QR குறியீடு ஒன்றும் அறிமுகப்படுத்தப்படாது என்றும், முறைமையில் இருந்த சுமார் 2 மில்லியன் தரவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது மிகச் சிறியளவிலானோரே ‘Inactive’ எனக் காட்டப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

எனவே அந்தப் பிரிவினருக்கு மீண்டும் பதிவு செய்ய முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. QR ஒதுக்கீடு இந்த வார இறுதியில் நிறைவடைவதால், QR குறியீட்டைச் சரிசெய்து தங்களுக்குரிய எரிபொருள் அளவைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சிலரின் வாகன பதிவுச் சான்றிதழ் சட்டபூர்வமாக மாற்றப்படாமல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தீர்க்க புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி 9 மாகாணங்களுக்கும் 9 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், அவற்றின் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி QR குறியீட்டை பெறுவதற்கான உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு தேவையான தகவல்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய பின்னர் அவை பரிசீலிக்கப்பட்டு தரவுகள் சீரமைக்கப்படும் என்றும் மயூர நெத்திகுமாரகே மேலும் தெரிவித்துள்ளார்.