‘அரசன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வேகமெடுத்த சிம்பு–வெற்றிமாறன் கூட்டணி
தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படங்களில் ஒன்றாக ‘அரசன்’ பார்க்கப்படுகிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, கிஷோர் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். கேங்க்ஸ்டர் கதைமாந்திரத்தில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
‘அரசன்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்றது. குறிப்பாக கோவில்பட்டி மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் படக்குழு முகாமிட்டது. இந்த கட்டத்தில் கிராமப்புற பின்னணியுடன் கூடிய பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் சிம்பு ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த கதாபாத்திரத்துக்கான சில புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.
இந்நிலையில் ‘அரசன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை நகரில் தொடங்கியுள்ளது. இந்த கட்டத்தில் நகரத்தை மையமாகக் கொண்ட முக்கிய காட்சிகள் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படக்குழுவினர் சுமார் 35 நாட்கள் தொடர்ந்து இந்த படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். வெற்றிமாறன் இயக்கமும், சிம்புவின் கதாபாத்திரமும் இணையும் இந்த திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் உருவாகியுள்ளது.


