"இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது".. நடிகை திரிஷாவின் பேச்சுக்கு ரசிகர்கள் வரவேற்பு
சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை திரிஷா, இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது என்றும், அதன் உச்சரிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா கிருஷ்ணன், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் உரையாடிய திரிஷா, இலங்கைத் தமிழ் மீது தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, அந்த மொழியின் உச்சரிப்பு மற்றும் பேச்சு நடை மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "எனக்கு இலங்கைத் தமிழ் மிகவும் பிடிக்கும். அதன் தூய்மையான தன்மை எனக்கு மிகவும் ஈர்க்கிறது. நாங்கள்கூட அந்த அளவுக்கு அப்படிப் பேசுவதில்லை," என்று கூறினார்.
திரிஷாவின் இந்த கருத்தைக் கேட்ட அரங்கில் இருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரித்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். அந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

திரிஷாவின் இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து, இலங்கைத் தமிழின் தனித்துவமான சொற்கள், உச்சரிப்பு மற்றும் மொழிநடை குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், மொழியின் பல்வேறு வட்டார வழக்குகளும் தமிழின் வளமான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.