“பணம் இல்லாமல் எதற்கு குழந்தை?” – சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை வரலட்சுமி

குழந்தைகள் பெறுவதற்கு முன் பொருளாதார திட்டமிடல் அவசியம் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். “காசு இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டு பின்னர் கஷ்டப்பட வேண்டாம்” என்ற அவரது கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பணம் இல்லாமல் எதற்கு  குழந்தை?” – சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை வரலட்சுமி

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை வரலட்சுமி. முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான அவர், தற்போது நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும் இயக்குநருமான புதிய பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.

அவரது தயாரிப்பிலும் இயக்கத்திலும் உருவான ‘சரஸ்வதி’ திரைப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியானது. இதில் அவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படம் வெளியான பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து வரலட்சுமி பகிர்ந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. வாழ்க்கையில் குழந்தைகளை பெறுவது பெரிய பொறுப்பு என்றும், அதற்கு முன் பொருளாதார நிலையை சரியாக திட்டமிடுவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“பணம் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டு பின்னர் கஷ்டப்பட வேண்டாம். முதலில் நிதி ஆதாரத்தை திட்டமிடுங்கள்; அதன் பிறகு குழந்தை பற்றி யோசிக்கலாம்” என்றார். குழந்தைகளை பெற்றுக்கொள்வது எளிதாக இருந்தாலும், அவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதே உண்மையான பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய காலத்தில் பொருளாதார நிலைமை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதால், குழந்தைகளை வளர்க்க தேவையான ஆதாரங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றார் வரலட்சுமி. சிலர் குழந்தைகளை பெற்றுக்கொண்டு பின்னர் வாழ்க்கை சிரமமாகிவிட்டதாக வருத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நான் குழந்தைகளுக்கு எதிரானவள் அல்ல. ஆனால் யோசிக்காமல் முடிவெடுப்பதற்கு ஆதரவு தரமாட்டேன். திருமணத்துக்குப் பிறகு நிதி நிலையை உறுதி செய்து கொண்டு பின்னர் குழந்தைகள் குறித்து முடிவு செய்யுங்கள். அந்த குழந்தைகளுக்காக பிறரிடம் உதவி கேட்க வேண்டிய நிலை வரக்கூடாது,” என்றார்.

இந்த கருத்து சமூக வலைதளங்களில் பலரிடையே ஆதரவும் எதிர்ப்பும் பெற்ற நிலையில், வரலட்சுமியின் பேச்சு தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்படும் விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது.