வெற்றிப்பெற்றும் கோப்பையை வாங்க முடியாத இந்திய அணி.... ரசிகர்களுக்கு ஏமாற்றம்... நடந்தது என்ன?

Key Points
  • இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்ற பிறகு கோப்பையை வாங்கத் தயாராக இருந்தது.
  • ஆனால், ஆசிய கிரிக்கெட் சங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷன் நக்வி தான் கோப்பையை வழங்குவார் என்...
வெற்றிப்பெற்றும் கோப்பையை வாங்க முடியாத இந்திய அணி.... ரசிகர்களுக்கு ஏமாற்றம்... நடந்தது என்ன?

ஆசிய கோப்பை வரலாற்றிலேயே மிகவும் மோசமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்குக் கோப்பையைத் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் தொடரில் விளையாடுவது, இறுதிப் போட்டியில் வென்று அந்தக் கோப்பையைத் தொடும் நிகழ்வுக்காகத்தான். ஆனால், வென்ற பிறகும் கோப்பையைப் பெற முடியாமல் போனது மிகவும் மோசமான விஷயமாகும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்திருந்தது. இந்தச் சூழ்நிலையால், பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்பதற்கு உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பும் எழுந்தது. 

இந்திய அணி விளையாடினாலும், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் புறக்கணித்தது. இந்த ஆசியக் கோப்பை தொடரில், லீக் சுற்று, சூப்பர் ஃபோர் சுற்று, மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் மூன்று முறையும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்ற பிறகு கோப்பையை வாங்கத் தயாராக இருந்தது. ஆனால், ஆசிய கிரிக்கெட் சங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷன் நக்வி தான் கோப்பையை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என்று திட்டவட்டமாகப் போர்க் கொடி தூக்கினர்.

இந்திய அணி வீரர்கள் கோப்பையைப் பெற மறுத்ததால், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், பாகிஸ்தான் அமைச்சர் மோஷன் நக்வி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தார். அவர், "நான் தான் கோப்பையை கொடுப்பேன். இல்லையென்றால் என் கையில் இன்று வாங்காதீர்கள்" என்று கூறிவிட்டார்.

இதன் விளைவாக, பாகிஸ்தான் வீரர்கள் மட்டும் ரன்னர் அப் பரிசைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால், இந்திய அணி ஆசிய கோப்பையையும், வெற்றி பெற்றதற்கான வேறு எந்தப் பரிசையும் வாங்கவில்லை.

மோஷன் நக்வியின் இந்தச் செயலுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். "உங்கள் கையால் பரிசை வாங்க விரும்பவில்லை" என்று வீரர்கள் தெரிவித்த நிலையில், நியாயமான மனிதராக இருந்தால், மோஷின் நக்வி மேடையில் ஏறி இருக்கக் கூடாது.

அல்லது, வேறு ஒரு நபரிடம் இருந்து கோப்பையை வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால், எதையும் செய்யாமல் இந்தியாவுக்குக் கோப்பையைப் பெற முடியாத ஒரு நிலையை மோஷின் நக்வி ஏற்படுத்தி விட்டார்.

இதன் மூலம், "பாகிஸ்தான் இவ்வளவு கேவலமாக அரசியல் செய்ய வேண்டுமா" என்று ரசிகர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். கோப்பையை வென்று, அதனைத் தொட்டு மைதானத்தைச் சுற்றி வரும் காட்சியைப் பார்க்க எண்ணியிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google