அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி: நமீபியா போட்டியில் விளையாடுவாரா? 2 முக்கிய அப்டேட்

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் நமீபியாவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்நிலையில் அணியின் முக்கிய வீரர்களின் உடற்தகுதி குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி: நமீபியா போட்டியில் விளையாடுவாரா? 2 முக்கிய அப்டேட்

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் நமீபியாவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்நிலையில் அணியின் முக்கிய வீரர்களின் உடற்தகுதி குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே கடும் காய்ச்சலுடன் களமிறங்கிய அபிஷேக் சர்மா, முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். பின்னர் அமெரிக்கா பேட்டிங் செய்தபோது அவர் மைதானத்திலும், டிரெஸ்ஸிங் ரூமிலும் காணப்படவில்லை. உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வயிற்று தொடர்பான பிரச்சனையும் இருப்பதாக கூறப்படுகிறது. நமீபியா போட்டிக்கான பயிற்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.

அவரது நிலை குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்ஷேட் விளக்கமளித்துள்ளார். அபிஷேக்கின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் நமீபியா போட்டிக்குள் குணமடைவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், போட்டி நாள்வரை அவரின் உடற்தகுதி கண்காணிக்கப்படும்.

இதற்கிடையில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்துள்ளது. முதன்மை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணியில் சேர வாய்ப்பு அதிகரித்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக முதல் போட்டியில் பங்கேற்காத அவர், தற்போது பயிற்சியில் பந்துவீசத் தொடங்கியுள்ளார். பயிற்சியின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தனது விலா எலும்பு காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து அணியுடன் டெல்லியில் இணைந்துள்ளார். பிசிசிஐ அனுமதி வழங்கியதையடுத்து அவர் மீண்டும் தேர்வுக்கு தயாராக உள்ளார்.

அபிஷேக் சர்மா விளையாட முடியாத சூழ்நிலை உருவானால், மாற்று வீரருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எந்த கலவையுடன் களமிறங்கும் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.