விராட் கோலி 100 சதங்களை கண்டிப்பாக அடிப்பார்! – ஆகாஷ் சோப்ரா உறுதியான நம்பிக்கை

Key Points
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகா...
விராட் கோலி 100 சதங்களை கண்டிப்பாக அடிப்பார்! – ஆகாஷ் சோப்ரா உறுதியான நம்பிக்கை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உற்சாகத்துடன் பாராட்டியுள்ளார். மேலும், அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட், ODI, T20I) 100 சதங்களை விராட் கோலி அடைவார் என அவர் உறுதியாக கூறியுள்ளார்.

“விராட் கோலி அடுத்தடுத்து சதங்கள் அடித்து வருகிறார். அவர் சதங்களின் சக்கரவர்த்தி என்றே சொல்லலாம். தற்போது அவர் 84 சதங்கள் அடித்துள்ளார். 16 சதங்கள் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில், 2027 உலகக் கோப்பை வரை சுமார் 40 ஆட்டங்கள் மீதம் இருக்கின்றன. எனவே, 100 சதங்களை அடைவது சாத்தியமானது, கண்டிப்பாக நடக்கும்,” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கோலி இந்த முறை வழக்கமான ஆக்ரோஷத்திற்குப் பதிலாக ஒரு மாறுபட்ட, முன்னெச்சரிக்கையான அணுகுமுறையுடன் ஆடியதையும் அவர் சுட்டிக்காட்டினார். “ராஞ்சியில் காணப்பட்ட 7 சிக்ஸர்கள் அடித்த வெறி இந்த சதத்தில் இல்லை. ஆனால், இந்த நிதானமான ஆட்டம் தான் இந்நேரத்திற்கு ஏற்றது,” என்றார்.

இதைத் தொடர்ந்து, ருதுராஜ் கெய்க்வாட்டின் சதம் குறித்தும் அவர் பாராட்டுகளை வழங்கினார். “கோலியின் சதத்தை விட ருதுராஜ் கெய்க்வாட்டின் சதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது. நாங்கள் நீண்ட நேரமாக அவருக்கு முழுமையான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். இப்போது, அணியின் துணைக் கேப்டன் இடத்தில் அவர் நிறுத்தப்பட்டு, அந்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சதம் அடித்துள்ளார்,” என்று கூறினார்.

ருதுராஜ் கெய்க்வாட், 83 பந்துகளில் 105 ரன்கள் (12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) அடித்து, விராட் கோலியுடன் 195 ரன்கள் கூட்டணி அமைத்தார். பின்னர் மார்கோ ஜான்சனின் பந்தில் டோனி டி சோர்சியிடம் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார்.

எனினும், ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்பும்போது ருதுராஜ் கெய்க்வாட்டின் எதிர்காலம் குறித்து சந்தேகங்கள் எழும் என ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டார். “அவர் தனது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களால் பாதிக்கப்படலாம். ஆனால், இந்த சதம் அனைவர் மனதையும் குளிர வைக்கும் ஆட்டம்,” என்று நினைவு கூறினார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google