உலகக்கோப்பை ஏமாற்றம்: இலங்கை அணியின் கேப்டன் மாற்றம்... தீவிர ஆலோசனை

2026 டி20 உலகக்கோப்பையை இந்தியாவுடன் இணைந்து நடத்தும் இலங்கை அணி, சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
உலகக்கோப்பை ஏமாற்றம்: இலங்கை அணியின் கேப்டன் மாற்றம்... தீவிர ஆலோசனை

2026 டி20 உலகக்கோப்பையை இந்தியாவுடன் இணைந்து நடத்தும் இலங்கை அணி, சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அரையிறுதிக்கே செல்ல முடியாமல் போனது நிர்வாகத்தை கடும் முடிவுகள் எடுக்கத் தூண்டியுள்ளது.

லீக் சுற்றில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றது. ஆஸ்திரேலியா அணியையும் வீழ்த்தி வலுவாக முன்னேறியது. ஆனால் சூப்பர் 8 சுற்றில் நிலைமை மாறியது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முக்கியமான போட்டிகளில் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பு தவறியது.

இங்கிலாந்துக்கு எதிராக 147 ரன்களையும், நியூசிலாந்துக்கு எதிராக 169 ரன்களையும் துரத்த முடியாமல் பேட்டிங் வரிசை சரிந்தது தோல்விக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் முக்கிய பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மதீஷ பத்திரண காயம் காரணமாக விலகியது அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த தோல்வியைத் தொடர்ந்து கேப்டன் தசுன் சானக்க மற்றும் தேர்வுக்குழுவினரை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரித் அசலங்க நீக்கப்பட்ட பின் கேப்டனாக பொறுப்பேற்ற ஷனக, அணியை அரையிறுதி வரை கொண்டு செல்லத் தவறியதால் மாற்றம் அவசியம் என கருதப்படுகிறது.

ஏற்கனவே தலைமைப் பயிற்சியாளரான  சனத் ஜயசூரிய இந்தத் தொடருக்குப் பின் விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் உலகக்கோப்பைக்குப் பிறகு இலங்கை அணியில் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு மட்டத்திலேயே பெரிய மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

தோல்வி குறித்து கருத்து தெரிவித்த தசுன் ஷனகா, வெளிப்புற எதிர்மறை விமர்சனங்களே அணியின் மனநிலையை பாதித்ததாக கூறினார். மைதானத்திற்கு வெளியே இருந்து வரும் கடுமையான விமர்சனங்கள் வீரர்களின் செயல்திறனை பாதிக்கின்றன என்றும், எதிர்கால வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு இதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொடரை இணைந்து நடத்தும் இந்திய அணி தனது கடைசி போட்டியில்  மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.