தேசிய விருது பெற்ற 'டூலெட்' பட இயக்குநர் செழியன் திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கியது தமிழ் திரையுலகம்!
தேசிய விருது பெற்ற 'டூலெட்' திரைப்படத்தின் இயக்குநரும், முன்னணி ஒளிப்பதிவாளருமான செழியன் இன்று காலை உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும், புகழ்பெற்ற இயக்குநருமான செழியன் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக திடீரென காலமானார். இவரின் இந்த எதிர்பாராத மறைவுச் செய்தி தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாலா, சீனு ராமசாமி போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் செழியன். குறிப்பாக, 'கல்லூரி', 'தென்மேற்கு பருவக்காற்று', 'பரதேசி', 'தாரை தப்பட்டை' மற்றும் 'சவரக்கத்தி' உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
வெறும் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், சிறந்த இயக்குநராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் எழுதி, இயக்கிய 'டூலெட்' (Tolet) திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்ததோடு, சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. சினிமா மட்டுமின்றி, ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய ‘உலக சினிமா’ என்ற தொடர் கட்டுரை மற்றும் புத்தகங்கள் மூலமாகப் பலருக்கு உலகத் திரைப்படங்களை அறிமுகம் செய்தவர்.
இன்று காலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. செழியனின் மறைவுக்குத் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
