இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு: தட்டுப்பாடு ஏற்படாது என அரசு உறுதி

நாட்டில் தற்போது ஒரு மாதத்திற்குத் தேவையான கையிருப்பு உள்ளதாகவும், புதிய இறக்குமதிகள் இல்லாவிட்டாலும் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு: தட்டுப்பாடு ஏற்படாது என அரசு உறுதி

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, லங்கா டீசல் விலை 4 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 281 ரூபாய்க்கும், லங்கா சுப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 329 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் (340 ரூபாய்) மற்றும் மண்ணெண்ணெய் (182 ரூபாய்) ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஒரு மாதத்திற்குத் தேவையான கையிருப்பு உள்ளதாகவும், புதிய இறக்குமதிகள் இல்லாவிட்டாலும் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.