சூப்பர் 8 சுற்றில் இலங்கை வீழ்ச்சி: 51 ஓட்டங்களால் இங்கிலாந்து அபார வெற்றி

147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

சூப்பர் 8 சுற்றில் இலங்கை வீழ்ச்சி: 51 ஓட்டங்களால் இங்கிலாந்து அபார வெற்றி

ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணி பங்கேற்ற முதல் போட்டியில், இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது.

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (22) பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை குவித்தது. இங்கிலாந்து அணிக்காக பில் சால்ட் 62 ஓட்டங்களைப் பெற்று முக்கிய பங்களிப்பு வழங்கினார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்‌ஷனா மற்றும் டில்ஷான் மதுஷங்க தலா 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

இந்த வெற்றியுடன், இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி தொடர்ச்சியாகப் பெற்ற 12ஆவது இருபதுக்கு 20 வெற்றியாக இது பதிவாகியுள்ளது. மேலும், இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பெற்ற 6ஆவது தோல்வியாகவும் இந்தப் போட்டி அமைந்துள்ளது. உலகக் கிண்ண வரலாற்றில் இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற 7 போட்டிகளில், இலங்கை அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.