சாம்சன் 'சரவெடி': வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு கம்பீரமாக முன்னேறியது இந்தியா!

டி20 உலகக்கோப்பை: சஞ்சு சாம்சனின் அதிரடி 97* ரன்களால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளின் அரையிறுதி மோதல் உறுதி

சாம்சன் 'சரவெடி': வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு கம்பீரமாக முன்னேறியது இந்தியா!

இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றின் மிக முக்கியமான ஆட்டத்தில் இன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் சஞ்சு சாம்சனின் அசாத்திய பேட்டிங் திறமையால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, அரையிறுதிப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. ஷாய் ஹோப் (32) மற்றும் சேஸ் (40) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இறுதியில் ஹோல்டர் மற்றும் ரோவ்மேன் பவல் அதிரடியாக ரன்களைக் குவிக்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பம் சற்று அதிர்ச்சிகரமாக அமைந்தது. அபிஷேக் சர்மா (10), இஷான் கிஷன் (10) மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (18) ஆகியோர் சீக்கிரம் ஆட்டமிழந்தனர். இருப்பினும், ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் நங்கூரமாக நிலைத்து நின்ற சஞ்சு சாம்சன், விஸ்வரூபம் எடுத்தார். அவருக்குத் துணையாக திலக் வர்மா (27) மற்றும் ஹர்திக் பாண்ட்யா (17) ஆகியோர் ரன் சேர்க்க, ஆட்டம் பரபரப்பான நிலையை எட்டியது.

மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர் மழையைப் பொழிந்த சஞ்சு சாம்சன், வெறும் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இந்தியாவுடன் அரையிறுதிப் போட்டிகளில் மல்லுக்கட்டத் தயாராகிவிட்டன.