மேடையிலேயே தூங்கிய தென்னாப்பிரிக்க கேப்டன்.. மானமே போச்சு.. ரசிகர்கள் விமர்சனம்!

Key Points
  • 2023 உலகக்கோப்பை கேப்டன்கள் வட்ட மேசை நிகழ்ச்சியில் அனைத்து கேப்டன்களுக்கு மத்தியில் அமர்ந்து தூங்கினார் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா.
மேடையிலேயே தூங்கிய தென்னாப்பிரிக்க கேப்டன்.. மானமே போச்சு.. ரசிகர்கள் விமர்சனம்!

2023 உலகக்கோப்பை கேப்டன்கள் வட்ட மேசை நிகழ்ச்சியில் அனைத்து கேப்டன்களுக்கு மத்தியில் அமர்ந்து தூங்கினார் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா.

2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வந்துள்ள பத்து கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் வட்ட மேசை நிகழ்வு அஹமதாபாத்தில் நடைபெற்றது.

அதில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள பத்து அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டனர். இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மீது தான் அனைவரின் கண்களும் இருந்தன.

சில கேப்டன்கள் இரண்டு பேர் சேர்ந்து அமரும் சோபாவில் அமர்ந்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா தனியான நாற்காலி ஒன்றில் அமர்ந்து இருந்தார். அவர் அதில் உட்கார்ந்த சில மணி நேரத்தில் எல்லாம் தூங்கத் துவங்கி விட்டார்.

அந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் பரவத் துவங்கியது. இதை அடுத்து ரசிகர்கள் பலர் டெம்பா பவுமாவை திட்டித் தீர்த்தனர். 
சிலர் தென்னாப்பிரிக்கா நாட்டின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ள ஒருவர் இப்படி மேடையில் தூங்கலாமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.

ஆனால், உண்மையில் பரிதாப நிலையில் தான் டெம்பா பவுமா இந்த நிகழ்ச்சிக்கே வந்து சேர்ந்தார். முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியின் பயிற்சிப் போட்டிகளில் டெம்பா பவுமா பங்கேற்கவில்லை. 

59 பந்தில் 90 ரன் குவித்த பாபர் அசாம்.. பரபரப்பை ஏற்படுத்திய போட்டி

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்தியா வந்த அவர், சில தனிப்பட்ட காரணங்களுக்காக உடனடியாக மீண்டும் தன் நாட்டுக்கு கிளம்பிச் சென்றார்.

பின் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த அவர் டெல்லியில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியுடன் இணைந்தார். பின் மீண்டும், அங்கிருந்து அஹமதாபாத்தில் நடைபெற்ற கேப்டன்கள் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வந்தது. 

அதனால், கடும் சோர்வுக்கு நடுவே தான் டெம்பா பவுமா இந்த நிகழ்ச்சியிலேயே கலந்து கொண்டார்.

இந்த நிலையில் தான் அவர் நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி வழிந்து இருக்கிறார். தொடர்ந்து விமான பயணம் மேற்கொண்டதே அவரது இந்த நிலைக்கு காரணம். இதை புரிந்து கொள்ளாமல் பலர் அவரை கிண்டல் செய்தும், திட்டியும் வருகிறார்கள்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google