மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்: அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் – பின்னணியில் ரஷ்யா?
அமெரிக்க ராணுவத்தின் கடற்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் பிற ராணுவ வளங்கள் தொடர்பான உளவு தகவல்களும் ஈரானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு பதிலடியாக பல மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் ரஷ்யா வழங்கிய உளவு தகவல்கள் இருக்கலாம் என்ற பரபரப்பான தகவல்களும் வெளிவந்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனுடன், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு சொந்தமான ராணுவ வசதிகள் மற்றும் கட்டமைப்புகளையும் இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இவற்றில் சில இடங்களை இலக்காக வைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய விமானப்படைத் தளமான அல் உதீத் ஏர் பேஸ், சவுதி அரேபியாவின் ரியாத் பகுதி, குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படுகிறது. மேலும் சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகளையும் ஈரான் குறிவைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்கள் மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், ஈரானுக்கு முக்கிய ராணுவ தகவல்கள் கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில சர்வதேச ஊடகங்களின் தகவல்படி, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், கட்டளை மையங்கள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் அமைப்புகள் பற்றிய தகவல்களை ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், ஈரான் மீது பதற்றம் அதிகரித்த பிறகு அந்த நாடு ரஷ்யாவுடன் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ராணுவத்தின் கடற்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் பிற ராணுவ வளங்கள் தொடர்பான உளவு தகவல்களும் ஈரானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இதே நேரத்தில், ஈரான் மற்றும் சீனாவுக்கு நெருக்கமான உறவு இருந்தாலும், சீனா நேரடி ராணுவ உதவிகளை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு துறையில் ஈரான் மற்றும் ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு அதிகமாக இருப்பதே அதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக போரை தொடங்கிய பின்னர், ரஷ்யா மற்றும் ஈரான் இடையேயான உறவு மேலும் வலுவடைந்தது. அந்த காலத்தில் ரஷ்யாவிற்கு ட்ரோன் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை ஈரான் வழங்கியதாக கூறப்பட்டது. அந்த ட்ரோன்கள் உக்ரைனில் பல தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன.
இதற்கு பதிலாக தற்போது ரஷ்யா ஈரானுக்கு உளவு தகவல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆதரவை வழங்கி இருக்கலாம் என்று சில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இந்த பதற்றம் உலக அரசியலிலும் பாதுகாப்பு சூழலிலும் புதிய சவால்களை உருவாக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
