உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை.. பயனர்கள் அவதி.. மெட்டா விளக்கம்
உலகின் பல நாடுகளில் பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் பயனர்கள் சிரமமடைந்தனர். தொழில்நுட்ப கோளாறே காரணம் என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதள சேவைகளில் ஒன்றான பேஸ்புக், இன்று உலகின் பல பகுதிகளில் திடீரென தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள பயனர்கள் தங்களது கணக்குகளை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பயனர்களில் பலர், பேஸ்புக் கணக்குகள் தானாகவே வெளியேறுவது (Log Out), புதிய பதிவுகளை வெளியிட முடியாத நிலை, பக்கங்கள் சரியாக ஏற்றப்படாதது மற்றும் பல்வேறு பிழைச் செய்திகள் (Error Messages) தோன்றுவது போன்ற பிரச்சினைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இதையடுத்து, மெட்டா நிறுவனம் இந்த சேவை தடங்கல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக் தகவல் மையங்களுக்கிடையேயான தொடர்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த பிரச்சினைக்குக் காரணம் என்றும், பொறியியல் குழுக்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நிறுவனம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளது.
தற்போதைய தகவல்களின் அடிப்படையில், இந்த பிரச்சினை பெரும்பாலும் டெஸ்க்டாப் (Desktop) மூலம் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் பயனர்களை அதிகமாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மொபைல் செயலி (Mobile App) மூலம் சேவையை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, டெஸ்க்டாப் பயனர்கள் சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் முயற்சிக்குமாறு தொழில்நுட்ப நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.