இந்தியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 387 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 388 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் பென் டக்கெட் அபாரமாக விளையாடி 141 ஓட்டங்களுடன் சதம் பதிவு செய்தார். அதேவேளை, ஜாக்கப் பெத்தேல் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அரைசதங்களை விளாசி அணியின் பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு பங்களித்தனர்.
388 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்ப வீரர்களான ரோகித் சர்மா மற்றும் அணித்தலைவர் சுப்மன் கில் சிறந்த தொடக்கத்தை வழங்கினர். ரோகித் சர்மா 138 ஓட்டங்களையும், சுப்மன் கில் 77 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 74 ஓட்டங்களை சேர்த்தார். இஷான் கிஷன் 14 ஓட்டங்களுடன் வெளியேற, ஸ்ரேயஸ் அய்யர் ஓட்டம் எதுவும் பெறாமல் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த இந்திய வீரர்களால் பெரிய இணைப்பாட்டத்தை உருவாக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 360 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.