அர்ஷ்தீப் சிங் சர்ச்சையைத் தொடர்ந்து: ஐசிசி அறிமுகப்படுத்தும் புதிய விதிமுறை

டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஷ்தீப் சிங் சர்ச்சையைத் தொடர்ந்து: ஐசிசி அறிமுகப்படுத்தும் புதிய விதிமுறை

டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் தடுப்பாட்டத்தில் ஆடியபோது, பந்தை எடுத்த அர்ஷ்தீப் சிங், அதனை மிட்செல் மீது ஓங்கி எறிந்தார். இந்த செய்கையால் ஆத்திரமடைந்த மிட்செல், அர்ஷ்தீப்பை நோக்கி கோபத்தில் கத்தினார். பொதுவாகவே கிரிக்கெட்டின் அகிம்சைவாதிகள் என்று அறியப்படும் நியூசிலாந்து அணியில், ஒரு வீரர் இப்படி களத்தில் கோபத்தை வெளிப்படுத்துவது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இறுதியில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் வந்து மிட்செலை சமாதானப்படுத்தி நிலமையை சீர் செய்தார்.

அர்ஷ்தீப் சிங் செய்த செயல் ஐசிசி விதிமுறைகளின்படி கடுமையான தவறாகும். இதற்காக அவருக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், இது டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி என்பதால், தடை விதிக்கப்பட்டாலும் அது அர்ஷ்தீப் அல்லது இந்திய அணியின் எதிர்கால போட்டிகளை பெரிதாக பாதிக்காது என்ற நம்பிக்கையிலேயே அவர் இவ்வாறு செயல்பட்டார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ஐசிசி புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில், நாக்அவுட் சுற்றுகளில் (காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி) ஒரு வீரர் கடுமையான தவறு செய்தால், அடுத்த இருதரப்பு தொடரில் மட்டுமே தடை விதிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த குறையை போக்கவே ஐசிசி புதிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

புதிய விதிமுறையின்படி, ஐசிசி நாக்அவுட் சுற்றுகளில் ஒரு வீரர் பெரிய தவறு செய்தால், உடனடியாக அடுத்த போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும். குறிப்பாக இறுதிப் போட்டியில் தவறு செய்து தடை விதிக்கப்படும் நிலை ஏற்பட்டால், அந்த வீரர் அடுத்த இருதரப்பு தொடரில் ஒரு போட்டியில் பங்கேற்க தடை செய்யப்படுவார். மேலும், அடுத்து அவர் ஐசிசி நடத்தும் எந்த கோப்பை தொடரில் இடம்பெற்றாலும், முதல் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும். ஒருவேளை, அந்த வீரர் அடுத்த ஐசிசி தொடரில் பங்கேற்கவில்லை என்றால், தடைக்கு பதிலாக அவரது ஊதியத்தில் பெரும் பகுதி பிடித்தம் செய்யப்பட்டு ஐசிசி கணக்கில் சேர்க்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய விதிமுறை குறித்து அனைத்து உறுப்பு நாடுகளிடமும் கருத்து கேட்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் இது அதிகாரப்பூர்வ சட்டமாக மாற்றப்படும் என ஐசிசி முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் என்பது ஆரோக்கியமான வார்த்தைப் போராக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், கடுமையான நடவடிக்கைகள் அல்லது உடல் ரீதியான தாக்குதல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்றும் ஐசிசி உறுதியாக தெரிவித்துள்ளது. பந்தை அல்லது பேட்டை பயன்படுத்தி மற்றொரு வீரர் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் ஐசிசி எச்சரித்துள்ளது.

இந்த பின்னணியில், இறுதிப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் செய்த செயலுக்கு ஐசிசி நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிசிசிஐ கூட குறைந்தபட்ச தண்டனையை அர்ஷ்தீப்புக்கு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. மொத்தத்தில் மூன்று முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையும் இந்தியாவுக்கு உண்டு. இந்த வெற்றிக் களத்தில் எழுந்த சர்ச்சை, கிரிக்கெட் விதிமுறைகளில் முக்கிய மாற்றத்தை கொண்டுவர ஐசிசியை தூண்டியுள்ளது.