நட்சத்திர வீரர்கள் இல்லை... ஆனாலும் நாங்க இங்கிலாந்த ஜெயிச்சதுக்கு இவர் தான் முக்கிய காரணம்; சுப்மன் கில் ஓபன் டாக்!

Key Points
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவே மிக முக்கிய காரணம் என இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில்...
நட்சத்திர வீரர்கள் இல்லை... ஆனாலும் நாங்க இங்கிலாந்த ஜெயிச்சதுக்கு இவர் தான் முக்கிய காரணம்; சுப்மன் கில் ஓபன் டாக்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவே மிக முக்கிய காரணம் என இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் கூறியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் மூலம், 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 55 ரன்களும், சுப்மன் கில் 52* ரன்களும், துருவ் ஜூரல் 39* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இலக்கை அசால்டாக எட்டிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் நட்சத்திர நாயகனான சுப்மன் கில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும், அவர் இளம் வீரர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் வெற்றிக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுப்மன் கில் பேசுகையில், “இங்கிலாந்து அணி எங்கள் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தியது, ஆனால் எங்களது துவக்க வீரர்கள் மிக சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். துவக்கம் மிக சிறப்பாக அமைந்தாலும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததாலும் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது, ஆனால் துருவ் ஜூரல் களத்திற்கு வந்த உடன் என் மீதான மொத்த அழுத்தத்தையும் எடுத்து கொண்டார். 

சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது அவசியமானது. நான் துருவ் ஜூரலிடம், முதல் இன்னிங்ஸில் நீ நன்றாக விளையாடினாய், அதே போன்றே அதே மனநிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிலும் விளையாடுமாறு கூறினேன். முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. 

எல்.பி.டபிள்யூவில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினேன். இங்கிலாந்து போன்ற வலுவான அணியை இளம் வீரர்களை வைத்து எதிர்கொள்வது சாதரண விசயம் இல்லை, கே.எல் ராகுலும் முதல் போட்டிக்கு பிறகு விளையாடவில்லை, ஆனால் ரோஹித் சர்மா எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, எங்களுக்கு முழு ஆதரவாக இருந்தார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றிக்கு ரோஹித் சர்மா எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும், அவரின் ஆதரம் முக்கியம் காரணம்” என்று தெரிவித்தார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google