டி20 உலகக்கோப்பை 2026: நியூசிலாந்திடம் தோல்வி, வெளியேறிய இலங்கை, பாகிஸ்தானுக்கு சிக்கல்!

போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டது. 12.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் மற்றும் மெக்கான்சி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டி20 உலகக்கோப்பை 2026: நியூசிலாந்திடம் தோல்வி, வெளியேறிய இலங்கை, பாகிஸ்தானுக்கு சிக்கல்!

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் சூப்பர்-8 சுற்றில் இலங்கை அணி பரிதாபமான முறையில் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. நியூசிலாந்து அணியுடனான முக்கிய போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம், அரையிறுதி வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. இந்தத் தோல்வி, பாகிஸ்தான் அணியின் செமி ஃபைனல் கனவுக்கும் சவால்களை உருவாக்கியுள்ளது.

போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டது. 12.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் மற்றும் மெக்கான்சி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இணைந்து 80 ரன்களுக்கு மேல் சேர்த்து, அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 என உயர்த்தினர். சாண்ட்னர் 26 பந்தில் 4 சிக்சர்களுடன் 47 ரன்கள் குவிக்க, மெக்கான்சி 31 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 32 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை மீட்டெடுத்தனர்.

இலங்கை அணி 169 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான ஆட்டத்திற்கு முன் இலங்கை பேட்டர்கள் சரணடைந்தனர். கமிந்து மெண்டிஸ் 31 ரன்களும், துனித் வெல்லாலகே 29 ரன்களும் எடுத்ததைத் தவிர, மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை, 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது.
நியூசிலாந்து தரப்பில் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா பிரகாசித்தார். ஸ்பின் பந்துவீச்சில் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு மிக அருகில் சென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால், நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக செமி ஃபைனலுக்குத் தகுதி பெற்றுவிடும். ஒருவேளை அந்த போட்டியில் நெருக்கமான தோல்வியைச் சந்தித்தாலும், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முன்னிலையில் இருப்பதால் கவலை இல்லை.

மறுபுறம், பாகிஸ்தான் அணிக்கு இலங்கையின் இந்தத் தோல்வி சிக்கலை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். திரில் வெற்றி அல்லது தோல்வி இரண்டுமே பாகிஸ்தானை வெளியேற்றத்திற்கு உள்ளாக்கும். ரன் ரேட் விவகாரத்தில் பாகிஸ்தான் பின்தங்கியுள்ளதால், இனி வரும் போட்டிகளில் அவர்கள் ஆதிக்க வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். டி20 உலகக்கோப்பையின் சூப்பர்-8 சுற்று இப்போது மிகவும் சுவாரஸ்யமான திருப்பத்தை எட்டியுள்ளது.