இந்திய அணியில் இடமில்லை.. கடும் கோபத்தில் இருந்த ஸ்ரேயாஸ்... அரைசதம் விளாசி பதிலடி!
பஞ்சாப், டெல்லி அணிகள் மோதிய 66 ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 6 ரன்களில் வெளியேற, பிராப்சிம்ரன்சிங் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய ஜாஸ் இங்லிஷ், இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கலாக 12 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். 266 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 5 பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கலாக 34 பந்துகளில் 53 ரன்கள் அவர் சேர்த்தார்.

இதனையடுத்து, நேஹல் வதேரா 16 ரன்களும், ஷசாங் 11 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். களத்திற்கு வந்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
16 பந்துகளை எதிர்கொண்ட அவர் நான்கு சிக்ஸர், 3 பவுண்டரி என 44 ரன்கள் விளாசிய நிலையில், அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 275 என்ற அளவில் இருந்தது.
ஒரே ஓவரில் அவர் 25 ரன்கள் விளாசிய நிலையில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் முஸ்தஃபீசூர் ரஹ்மான் நான்கு ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை. இதனால் கடும் கோபத்தில் இருந்த ஸ்ரேயாஸ் தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்து உள்ளார்.
