களத்தில் தூங்கிய நடுவர்கள்.. ஏமாற்றிய ஐசிசி.. ரசிகர்கள் பரபரப்பு புகார்!

Key Points
  • பாகிஸ்தான் அணி பேட்டிங்கின் போது நெதர்லாந்து அணியின் மீக்கிரன் வீசிய 14வது ஓவரில் வெறும் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அ...
களத்தில் தூங்கிய நடுவர்கள்.. ஏமாற்றிய ஐசிசி.. ரசிகர்கள் பரபரப்பு புகார்!

பாகிஸ்தான் அணி பேட்டிங்கின் போது நெதர்லாந்து அணியின் மீக்கிரன் வீசிய 14வது ஓவரில் வெறும் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து பாகிஸ்தான் அணி தரப்பில் ஃபகர் ஜமான் - இமாம் உல் ஹக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதில் தொடக்க வீரர் ஜமான் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 15 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்து தவித்தது.

இதன்பின் வந்த கேப்டன் பாபர் அசாம் 18 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 15 ரன்களில் வெளியேறினார். 

இதனால் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. இதன்பின்னர் நட்சத்திர வீரர் ரிஸ்வான் - ஷகீல் கூட்டணி களத்தில் சிறப்பாக ரன்கள் சேர்த்தது. 

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது நடுவர்களின் தவறால், ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

நெதர்லாந்து அணியின் வான் மீக்கிரன் 14வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் 3 பந்துகள் டாட் பாலாக மாறியது. பின்னர் 4வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, 5வது பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது. 

அப்போது கள நடுவர்கள் இருவருமே கண்மூடித்தனமாக கடைசி பந்தை மறந்து, அடுத்த ஓவருக்கு சென்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு பந்து வீசப்படாததை நடுவர்கள் கண்காணிக்காமல் அடுத்த ஓவருக்கு சென்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நேரங்களில் ஒரு ரன் வித்தியாசத்தில் எதிரணிகள் வெற்றிபெறும் போது கூடுதல் சர்ச்சை உண்டாகும். இதுபோல் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் போட்டியின் போது ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டும் வீசப்பட்டது சர்ச்சையாகியது. 

இதனால் நடுவர்கள் கூடுதல் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google