அடுத்தடுத்து 2 கேப்டன்கள் விலகல்.. படிதார், பராக்குக்கு கேப்டன் பதவி.. துலீப் டிராபி தொடரில் அதிரடி மாற்றம்

Key Points
  • ஆசியக் கோப்பை மற்றும் வரவிருக்கும் டெஸ்ட் தொடர்களைக் கருத்தில் கொண்டு, எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால், அவர் இந்...
அடுத்தடுத்து 2 கேப்டன்கள் விலகல்.. படிதார், பராக்குக்கு கேப்டன் பதவி.. துலீப் டிராபி தொடரில் அதிரடி மாற்றம்

துலீப் டிராபியின் காலிறுதிப் போட்டிகள் வியாழக்கிழமை பெங்களூருவில் தொடங்கியுள்ள நிலையில், மத்திய மண்டல அணியின் கேப்டன் துருவ் ஜூரல் மற்றும் கிழக்கு மண்டல அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் முறையே காயம் மற்றும் காய்ச்சல் காரணமாக தங்கள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். 

இது அந்தந்த அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரல், மத்திய மண்டல அணியை வழிநடத்த இருந்தார். 

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்று வீரராகவும் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய நாள் பயிற்சியின் போது அவருக்குத் தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

ஆசியக் கோப்பை மற்றும் வரவிருக்கும் டெஸ்ட் தொடர்களைக் கருத்தில் கொண்டு, எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால், அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

அவருக்குப் பதிலாக, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்திய ரஜத் படிதார், மத்திய மண்டல அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மண்டல அணி, தனது காலிறுதிப் போட்டியில் வடகிழக்கு மண்டல அணியை எதிர்கொள்கிறது.

வலுவான வடக்கு மண்டல அணியை எதிர்கொள்ளும் கிழக்கு மண்டல அணிக்கு, கேப்டன் அபிமன்யு ஈஸ்வரனின் விலகல் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

போட்டி தொடங்குவதற்கு முன்பு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் இந்தப் போட்டியிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏற்கனவே, அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் மற்றும் அதிரடி வீரர் இஷான் கிஷன் ஆகியோர் இல்லாதது குறிப்பிடத்தக்கது. 

அபிமன்யு ஈஸ்வரன் இல்லாத நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரியான் பராக், கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, வடக்கு மண்டல அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த சுப்மன் கில், காய்ச்சலிலிருந்து முழுமையாக மீளாததால் இந்தத் தொடரிலிருந்து விலகினார். 

அவருக்குப் பதிலாக அங்கித் குமார் அந்த அணியை வழிநடத்தி வருகிறார். முக்கிய வீரர்கள் பலர் காயம் மற்றும் உடல்நலக் குறைவால் விலகியிருப்பது, துலீப் டிராபி தொடரின் தொடக்கத்திலேயே அணிகளுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google