நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலியானவர்களின் உடல்கள் இப்போது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில ஆறுகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு பாயும் ஆறுகளில், இந்திய அதிகாரிகள் மொத்தம் 7 உடல்களை மீட்டுள்ளனர். மஹாராஜ்கஞ்ச் பகுதி ஆற்றில் 4 உடல்களும், குஷிநகர் பகுதி ஆற்றில் 3 உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள் அனைத்தும் நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது இந்த உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேபாள அதிகாரிகள் இந்த உடல்களை தங்கள் உயிரிழப்பு பட்டியலில் சேர்க்கவில்லை, எனவே இவை தனி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பெருவெள்ளத்தில் நேபாளத்தில் இதுவரை 472 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, 1,400–க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். நேபாளத்திற்குள் 469 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் 3 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மீட்கப்பட்ட 7 உடல்கள் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை.
நேபாளத்தில் பனிப்பாறை உடைப்பு மற்றும் ஏரி வெடிப்பு காரணமாக திடீரென உருவான இந்த பெருவெள்ளம், பல மாவட்டங்களை முற்றிலும் சேதப்படுத்தியுள்ளது. வெள்ள நீர் அண்டை நாடுகளான இந்தியா மற்றும் சீனா வரை பாய்ந்துள்ளதால், மீட்புப் பணிகள் முப்புறமும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உத்தரப் பிரதேச காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் மேலும் உடல்கள் அல்லது உயிருடன் இருப்பவர்களைத் தேடும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வெள்ள நீர் இன்னும் முழுமையாக வடியாத நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மேலும் நேரம் எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய முன்னாள் அமைச்சர் எம். சரவணன் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிமன்றத்தில் விசாரணை!
கொழும்புதமிழ் WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
