சச்சின்-ஆண்டர்சன் பெயரிடும் விழா ஒத்திவைப்பு காரணம் என்ன? குடும்ப எதிர்ப்பு காரணமா?

Key Points
  • இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என பெயர் மாற்றப்பட்டுள்ளதுடன், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என ப...
சச்சின்-ஆண்டர்சன் பெயரிடும் விழா ஒத்திவைப்பு காரணம் என்ன? குடும்ப எதிர்ப்பு காரணமா?

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் டெஸ்ட் கிரிகெட்டில் மிகப்பெரும் சாதனையாளர்களாக வலம் வருகின்றனர். 

அவர்கள் இருவரையும் கௌரவிக்கும் பொருட்டு இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என பெயர் மாற்றப்பட்டுள்ளதுடன், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என பெயர் சூட்டும் நிகழ்வு நடைபெற இருந்தது.

இதற்காக சச்சின் மற்றும் ஆண்டர்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள் இரு நாடுகளின் முக்கியமான முன்னாள் வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருந்தனர். 

ஆனால் இந்த நிகழ்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. 

இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 275 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 25க்கும் மேற்பட்டவர்கள் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ம‌ரியாதை செலுத்தும் வகையில் சச்சின், ஆண்டர்சன் தொடர் என பெயரிடும் விழா ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கூட்டாக இந்த நிகழ்வை ஒத்திவைக்க முடிவு செய்தன. 

"இந்தியாவில் நடந்த துயர நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, மரியாதை நிமித்தமாக அறிவிப்பு சிறிது நேரம் காத்திருக்கலாம்" என்று ECB மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். 

இரு வாரியங்களும் இப்போது விழாவிற்கான நெகிழ்வான காலக்கெடுவைப் பரிசீலித்து வருகின்றன. இந்த நிகழ்வுக்கு கோப்பை பெயரிடப்பட்ட ஜாம்பவான்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவருக்கும் அழைப்புகள் நீட்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் என பெயர் மாற்றுவதற்கு மறைந்த இந்திய முன்னாள் வீரர் பட்டோடி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஏனெனில் இந்தியாவின் முதல் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் 2007 ஆம் ஆண்டு பட்டோடி டிராபி தொடங்கப்பட்டது. 

இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்காகவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இப்திகார் அலி கான் பட்டோடி மற்றும் அவரது மகன், முன்னாள் இந்திய கேப்டன் மன்சூர் அலி கான் ஆகியோரின் நினைவாக இது பெயரிடப்பட்டது.

இதேபோல் சச்சினும், ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் பட்டோடி பெயரை மாற்ற வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது. இவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பட்டோடி பெயரை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பது குறித்து ஈசிபி இப்போது மறுபரிசீலனை செய்து வருகிறது. '

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google