செல்வத்தில் உச்சம் தொட்ட எலான் மஸ்க்: உலகின் முதல் டிரில்லியனர் !
- உலகின் மிகவும் ஏழ்மையான 3.8 பில்லியன் மக்களின் மொத்த செல்வத்தை விட தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபரும் தொழில்நுட்ப உலகின் முன்னணி ஆளுமைகளில் ஒருவருமான எலான் மஸ்க், உலகின் முதல் "டிரில்லியனர்" என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது செல்வ மதிப்பு இந்த மைல்கல்லை எட்டுவதற்கு முக்கிய காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வால் ஸ்ட்ரீட்டில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தமை கருதப்படுகிறது. விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், முதலீட்டாளர்களின் அதிகரித்த நம்பிக்கையால் அண்மைக் காலங்களில் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
அறிக்கைகளின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஆரம்பத்தில் 150 அமெரிக்க டொலர் விலையில் வர்த்தகத்தைத் தொடங்கின. நாஸ்டாக் சந்தையில் அறிமுகமான பின்னர் பங்குகளின் மதிப்பு 11 சதவீதம் உயர்ந்ததன் மூலம், நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 1.96 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, சில நிமிடங்களிலேயே பங்கின் விலை மேலும் அதிகரித்து 164 அமெரிக்க டொலர்களை எட்டியது. இதனால், உலகின் மிகப் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் ஸ்பேஸ்எக்ஸ் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் மட்டுமன்றி, எலான் மஸ்க்கின் பிற நிறுவனங்களான டெஸ்லா, எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), xAI மற்றும் பல்வேறு தொழில்நுட்ப முதலீடுகளும் அவரது செல்வ உயர்வில் முக்கிய பங்காற்றியுள்ளன.
இதற்கிடையில், சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் தொடர்பாக செயற்படும் ஆக்ஸ்ஃபாம் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகின் மிகவும் ஏழ்மையான 3.8 பில்லியன் மக்களின் மொத்த செல்வத்தை விட தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை உலகளாவிய பொருளாதார சமத்துவமின்மை குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், தனிநபர் செல்வக் குவிப்பு எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதையும் மீண்டும் வெளிக்கொணர்ந்துள்ளது.


