இலங்கை வீரரை அடிக்கப் பாய்ந்த இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி - சூப்பர் ஓவர் தோல்விதான் காரணமா?
- தம்புல்லாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை-ஏ அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்த இந்திய-ஏ வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்க...
தம்புல்லாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தத் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இலங்கை-ஏ அணியுடன் இந்தியா-ஏ அணி மோதியது.
டாஸ் வென்ற இலங்கை-ஏ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா-ஏ அணி 49.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது. இதையடுத்துக் களமிறங்கிய இலங்கை-ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களை எடுத்தது. இதனால் போட்டி டை ஆனது.
போதிய வெளிச்சம் இல்லாததால், ஆட்டத்தை முடித்துக் கொண்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்க நடுவர் முடிவு செய்தார். இதனை இலங்கை-ஏ அணி கேப்டன் ஒப்புக் கொண்ட நிலையில், இந்திய-ஏ அணி கேப்டன் திலக் வர்மா ஒப்புக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை-ஏ அணி 16/0 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய-ஏ அணி 9/0 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்த விறுவிறுப்பான முடிவைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற இலங்கை வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கை வீரர் விஷின் ஹலம்பட்ஜ், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியிடம் வார்த்தைகளை விட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த சூர்யவன்ஷி, ஹலம்பட்ஜை அடிக்கப் பாய்ந்தார்.
இந்த எதிர்பாராத திடீர் சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே இலங்கை கேப்டன் நிரோஷன் டிக்வேலா இடைபட்டு, இலங்கை வீரர்களைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஓவரில் கிடைத்த பரபரப்பான தோல்வியும், அதற்கு முன்னதாக நடுவரின் முடிவில் இந்திய அணி கேப்டன் காட்டிய மறுப்புமே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.


