ரோஹித் சர்மா செய்த அந்த இரண்டு தவறுகள்.. தோல்வியை நோக்கி சென்ற இந்தியா... நடந்தது என்ன?

Key Points
  • இந்த போட்டியில் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தார். 
ரோஹித் சர்மா செய்த அந்த இரண்டு தவறுகள்.. தோல்வியை நோக்கி சென்ற இந்தியா... நடந்தது என்ன?

இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்த இரண்டு முக்கிய தவறுகள் காரணமாக இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது. 

எனினும், அமெரிக்க அணி பந்து வீச்சில் விதி மீறல் செய்ததால் இந்திய அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டதால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தார். 

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து குறைவாக ரன்கள் எடுத்த போதும், பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது.

ஆனால், அதற்கு நேர் மாறான முடிவை கேப்டன் ரோஹித் சர்மா. எடுத்த நிலையில், அமெரிக்க அணி முதல் 8 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்களை இழந்து இருந்தது. 

இந்த நிலையில்,  ஒன்பதாவது ஓவரை சிவம் துபேவை வீச சொன்னார் ரோஹித். ஏற்கனவே, நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய நிலையில் தேவையே இல்லாமல் ஐந்தாவது வேகப் பந்துவீச்சாளராக துபேவை பயன்படுத்தியது தவறாக போனது.

அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த ஐசிசி விதி... ஏற்பட்ட ட்விஸ்ட்.. சூப்பர் 8ல் இந்தியா!

அமெரிக்க அணி, ஒன்பதாவது ஓவரில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்ததுடன், விக்கெட்கள் விழுந்தாலும் அந்த அணி தொடர்ந்து ரன் குவித்து வந்தது.

இந்த பிட்ச்சில் 120 ரன்கள் எடுத்தால் நல்ல ஸ்கோர் என்ற நிலையில் அமெரிக்க அணி 20 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது. 111 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி சேஸிங் செய்தது. 

இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 3 மற்றும் விராட் கோலி 0 மோசமாக ஆட்டம் இழந்ததால் இந்திய அணி அழுத்தத்தில் இருந்தது. 

ரிஷப் பண்ட் 18 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே திணறிக் கொண்டு இருந்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருந்தால் இந்த கடினமான பிட்ச்சில் சேஸிங் அழுத்தத்தில் சிக்காமல் தப்பித்து இருக்கலாம்.

கடைசி ஐந்து ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்ததால் இந்திய அணி கடைசி ஓவர் வரை சென்று தான் வெற்றி பெறுமோ என ரசிகர்கள் பதற்றமடைந்தனர்.

டி20 உலகக்கோப்பை விதிப்படி பந்து வீசும் அணி ஒரு ஓவரை வீசி முடித்த பின் சரியாக 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவர் வீச தயாராகிவிட வேண்டும். ஒரு இன்னிங்ஸில் மூன்று முறைக்கு மேல் இந்த தாமதம் செய்தால் அந்த அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டி வழங்கப்படும். 

அதுபோல, அமெரிக்க அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இந்திய அணியின் ஸ்கோரில் அந்த ஐந்து ரன்கள் சேர்க்கப்பட்டது. அதனால் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை உருவானது. 

அமெரிக்க வீரர்கள் தாங்கள் செய்த தவறால் மனம் தளர்ந்து போன நிலையில் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

எனினும், கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருந்தாலோ, அல்லது பந்து வீச்சின் போது சிவம் துபேவை பயன்படுத்தாமல் இருந்தாலோ இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டு இருக்காது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google