ஆர்.சி.பி. அணியை வாங்கும் கர்நாடக துணை முதல்வர்? என்ன சொன்னார் தெரியுமா?
ஆர்.சி.பி. சர்ச்சையில் சிக்கிய நிலையில், அணியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்றுவிடுவதற்கு டியாஜியோ மதுபான நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், ஆர்சிபி அணியை கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வாங்க உள்ளதாக தகவல்கள் பரவின.
இது குறித்து துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமை பிரிட்டனைச் சேர்ந்த டியாஜியோ என்ற மதுபான நிறுவனத்திடம் உள்ளதுடன், ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த மதிப்பு 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, ஆர்.சி.பி. சர்ச்சையில் சிக்கிய நிலையில், அணியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்றுவிடுவதற்கு டியாஜியோ மதுபான நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்சிபி அணி நிர்வாகத்தின் மீதும் வழக்கு பாய்ந்திருக்கிறது. இதன் காரணமாக டியாஜியோ நிறுவனம் ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், சிவக்குமார் அளித்த விளக்கத்தில், “நான் ஒன்றும் பைத்தியக்கார மனிதன் அல்ல. நான் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சாதாரண உறுப்பினராக எனது இளம்பருவத்தில் இருந்தேன், அவ்வளவுதான் எனக்கும் கிரிக்கெட்டுக்குமான தொடர்பு.
ஆர்சிபி அணி நிர்வாகத்தில் சேருமாறு என்னைக் கேட்டுக் கொண்டாலும் கூட எனக்குப் போதிய நேரம் இல்லை. பிறகு ஏன் நான் ஆர்சிபி அணியை விலைக்கு வாங்க வேண்டும்? நான் ராயல் சேலஞ்ச் மதுபானத்தைக் கூட குடித்தது கிடையாது” என்று கூறினார்.