அவசர அவசரமாக இந்தியா திரும்பிய கம்பீர் - காரணம் இதுதான்.. எப்போது புறப்படுவார்?
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஜூன் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் இந்த டெஸ்ட் தொடர் வரும் ஆக. 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
முன்னதாக அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்ஸ் உடன் 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
இரண்டும் டிராவில் முடிந்த நிலையில், இந்த போட்டிகளில் கேஎல் ராகுல், கருண் நாயர், துருவ் ஜூரேல், ஷர்துல் தாக்கூர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சிறப்பாக செயற்பட்டனர்.
இந்த நிலையில், 4 நாள்களுக்கு இந்திய அணியுடன், இந்தியா ஏ அணி பெக்கன்ஹாமில் உள்ள கென்ட் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி போட்டியில் ஈடுபடுகிறது.
கடந்த சில நாள்கள் முன்னனர் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மான் கில் ஆகியோர் வலைப்பயிற்சிக்கு முன்னர் வீரர்கள் மத்தியில், பேசிய வீடியோ பிசிசிஐயால் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவசர அவசரமாக இந்தியா திரும்பி உள்ளார்.
அவரது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் நாடு திரும்பி உள்ளார். ஜூன் 11ஆம் தேதி அன்று கௌதம் கம்பீரின் தாயார் சீமா கம்பீருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
20ஆம் தேதிதான் லீட்ஸ் ஹெட்டிங்லீ மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில், கௌதம் கம்பீர் வரும் ஜூன் 17ஆம் தேதி மீண்டும் இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்படுகின்றது.