இனிமேலும் முடியாது.. பொங்கிய இந்திய அணி வீரர்கள்.. திணறிய பிசிசிஐ

அங்குள்ள உடற்பயிற்சிக் கூடம் போதுமான வசதிகளுடன் இல்லை எனவும், இந்திய வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.


இனிமேலும் முடியாது.. பொங்கிய இந்திய அணி வீரர்கள்.. திணறிய பிசிசிஐ

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களுக்கு அமெரிக்காவில் நல்ல ஹோட்டல் அறை கூட கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 

அங்குள்ள உடற்பயிற்சிக் கூடம் போதுமான வசதிகளுடன் இல்லை எனவும், இந்திய வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் உலகக்கோப்பை தொடர் அங்கு நடத்தப்பட்டு வருகிறது. 

இதனால், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் பெருமளவில் இந்திய அணி ஆடும் போட்டிகளை பார்க்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால், இந்திய அணிக்காக தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளும் நடந்துள்ளன. வெறும் ஆறு மாத காலத்தில் நியூயார்க் நகரத்தில் தற்காலிக கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டதால் பிட்ச் மிக மோசமாக உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதற்கான மைதானம் இல்லாததால் பூங்காவில் பயிற்சி செய்து வருவதுடன், அங்கு உருவாக்கப்பட்டு இருக்கும் பிட்ச் மிக அபாயகரமானதாக உள்ளதுடன், அதிகம் பவுன்ஸ் ஆகிறது. 

அதில் பயிற்சி செய்தால் காயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக இந்திய வீரர்கள் புகார் கூறிய நிலையில் திடீரென எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்பதால் பிசிசிஐ இந்திய வீரர்களை சமாதானம் செய்தது.

இந்திய வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் இந்திய வீரர்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் இல்லை என முன்னணி வீரர்கள் கூறியுள்ளனர். 

தொடர்ந்து புகார் மேல் புகார் வந்ததால் பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்ததுடன்,  இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் பிரபலமான உடற்பயிற்சி கூடம் ஒன்றில் அனைத்து வீரர்களுக்கும் சந்தா செலுத்தி உள்ளது. 

அதன் மூலம் இந்திய வீரர்கள் தினமும் அந்த உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், இந்திய வீரர்களுக்கு போதிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு வந்தாலும் பிற அணி வீரர்களை ஒப்பிடும்போது இந்திய வீரர்கள் சொகுசாக இருக்கிறார்கள். 

இலங்கை அணிக்கு நான்கு போட்டிகளும் நான்கு வெவ்வேறு இடங்களில் திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டி முடிந்த உடன் உடனடியாக விமான நிலையத்திற்கு சென்று தங்களுக்கான விமானம் சரியான நேரத்தில் வரவில்லை என்றாலும் கூட காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google