மோசமான நிலையில் இங்கிலாந்து.. அரை இறுதி வாய்ப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கையில்!

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மனது வைத்தால் இங்கிலாந்து அணி அரை இறுதி போகலாம். ஆனால், அது நடப்பது அரிதிலும் அரிது.


மோசமான நிலையில் இங்கிலாந்து.. அரை இறுதி வாய்ப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கையில்!

இங்கிலாந்து அணி 2023 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக போகவில்லை என்றாலும், மற்ற அணிகள் ஆட வேண்டிய போட்டிகளை கணக்கில் கொண்டு பார்த்தால் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு நாட்டுக்கு கிளம்ப வேண்டியது தான். 

ஒரே ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மனது வைத்தால் இங்கிலாந்து அணி அரை இறுதி போகலாம். ஆனால், அது நடப்பது அரிதிலும் அரிது.

ஆனால், இதில் சோகம் என்னவென்றால் அந்த அணி லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் ஆறு போட்டிகளின் முடிவில் ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்று, வெறும் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை சந்திக்க உள்ளது இங்கிலாந்து.

தற்போது புள்ளிப் பட்டியலில் இந்தியா 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன. முதல் நான்கு இடங்களில் இடம் பெறும் அணிகளே அரை இறுதிக்கு முன்னேறும்.

அந்த அடிப்படையில் இங்கிலாந்து அணி தனக்கு மீதமுள்ள மூன்று போட்டிகளை வென்றாலும் 8 புள்ளிகள் பெறும் .ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் 10 புள்ளிகளை பெற்று அரை இறுதிக்கு முன்னேறி விடும். இங்கிலாந்து அணியின் வாய்ப்பு பறிபோகும்.

அப்படியே இங்கிலாந்து அணி 8 புள்ளிகள் பெற்றாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தங்களின் அனைத்து மீதமுள்ள போட்டிகளிலும் தோல்வி அடைந்து அதே 8 புள்ளிகளுடன் இருந்தாலும் நெட் ரன் ரேட் என்ற சிக்கல் வரும்.

மேலும், ஆஸ்திரேலியா தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறது. நியூசிலாந்து அணியிலும் டாப் ஆர்டர் சிறப்பாக இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஃபார்ம் அவுட் ஆனது போல ஆடி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், இங்கிலாந்து அணியால் திடீரென ஃபார்முக்கு வர முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது.

இங்கிலாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பு முடிந்தது என்றே நாம் வைத்துக் கொள்ளலாம். ஆஸ்திரேலியா உடனான அடுத்த போட்டியில் அதற்கான முடிவு தெரிந்து விடும். அரை இறுதி வாய்ப்பை இழந்தாலும் கூட புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து. அதுதான் சோகத்திலும், பெரும் சோகம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google