அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடருக்கு முன் இந்திய அணியில் திடீர் மாற்றம்.. காயத்தால் விலகிய முக்கிய வீரர்!
காயம் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு முக்கிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக இரண்டு தொடர்களிலும் இருந்து விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அணி, அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளது. இந்த சூழலில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது நிதிஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழு மேற்கொண்ட பரிசோதனையில், அவர் முழுமையாக குணமடைய குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
நிதிஷ் குமார் ரெட்டியின் இடத்தை நிரப்பும் வகையில் இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தற்போது தேசிய அணியில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சூர்யான்ஷ் ஷெட்கேவுக்கு அயர்லாந்து தொடரில் சர்வதேச டி20 அறிமுக வாய்ப்பு கிடைக்குமா என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
