இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்? சூர்யகுமார் யாதவ் நீக்கப்படுகிறாரா என்ற பரபரப்பு!
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றம் குறித்து புதிய தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer) நியமிக்கப்படலாம் என்றும், தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் பொறுப்பு சூர்யகுமாரிடம் வழங்கப்பட்டது. அவரது தலைமையில் அணி சில முக்கிய வெற்றிகளை பெற்றாலும், சமீப கால போட்டிகளில் அவரது பேட்டிங் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக நடப்பு லீக் தொடரில் அவர் குறைந்த ரன்களே எடுத்துள்ளதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India) 2028 உலகக்கோப்பை மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போன்ற முக்கிய தொடர்களை முன்னிட்டு, புதிய தலைமுறையினர் அடங்கிய டி20 அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக, கேப்டன் பதவிக்கு ஷ்ரேயஸ் ஐயர் முக்கிய தேர்வாக பார்க்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளை சிறப்பாக வழிநடத்திய அனுபவம், அவருக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
பேட்டிங்கிலும் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயஸ் ஐயர், கடந்த சில சீசன்களில் அதிக ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்துள்ளார். அதே நேரத்தில், பஞ்சாப் அணியை வெற்றிகரமாக பைனல் வரை கொண்டு சென்ற அனுபவமும் அவரது கேப்டன்சி திறனை வெளிப்படுத்துகிறது.
எனினும், இது குறித்து பிசிசிஐ தரப்பில் இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும், வரும் தொடருக்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
