டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வருவேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவாரா என்ற கேள்விக்கு விராட் கோலி நேரடியாக பதிலளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வந்த கம்பேக் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவாரா என்ற நீண்டநாள் கேள்விக்கு நேரடியாக பதிலளித்து அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடருக்குப் பிறகு, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கோலி அறிவித்திருந்தார். அவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை நெருங்கியிருந்த நிலையில், அந்த சாதனையை எட்டிய பிறகாவது ஓய்வு பெற்றிருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கிடையில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சவால்களை சந்தித்து வருவதால், கோலி மீண்டும் அணிக்குத் திரும்பக்கூடும் என்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவின.
இந்த சூழ்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கோலியிடம், "நீங்கள் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவீர்கள் என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அது உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கோலி, "அந்த விவாதத்திற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை. அது முடிந்துபோன ஒரு அத்தியாயம். என்னுடைய நிறுவனத்தின் காலணிகளை மலிவான விலைக்கு கொடுக்க முடியும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட முடியாது," என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
கோலியின் இந்த கருத்து, அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டார் என்ற விவாதங்களுக்கு தெளிவான பதிலாக அமைந்துள்ளது.
இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் தனது பெயரை நிலைநிறுத்தியுள்ளார்.
