ஓடிடியில் சக்கைப்போடு போட்ட 'திரிஷ்யம் 2' இப்போது திரையரங்குகளில்! ஏப்ரல் 10-ம் தேதி ரீ-ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

ஓடிடியில் சக்கைப்போடு போட்ட 'திரிஷ்யம் 2' இப்போது திரையரங்குகளில்! ஏப்ரல் 10-ம் தேதி ரீ-ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி இந்தியத் திரையுலகையே வியக்க வைத்த திரைப்படம் 'திரிஷ்யம்'. வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதன் தொடர்ச்சியாக உருவான 'திரிஷ்யம் 2', கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகாவிட்டாலும், டிஜிட்டல் தளத்தில் இப்படம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியதுடன், அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

தற்போது 'திரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகம் (Drishyam 3) விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. மலையாளம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலில் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாவதாக இருந்த 'திரிஷ்யம் 3', தற்போது மோகன்லாலின் பிறந்தநாளான மே 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்றாம் பாகத்தைப் பார்ப்பதற்கு முன்னதாக ரசிகர்களுக்கு ஒரு திரையரங்க அனுபவத்தை (Theatrical Experience) வழங்கத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 10-ம் தேதி 'திரிஷ்யம் 2' திரைப்படம் முதன்முறையாகத் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ள 'திரிஷ்யம் 3', ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தின் இறுதி அத்தியாயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திப் பதிப்பில் அஜய் தேவ்கன், தபு, அக்ஷய் கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், இரண்டாம் பாகத்தின் ரீ-ரிலீஸ் (Re-release) ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் இரண்டாம் பாகத்தைப் பார்த்துவிட்டு, மே மாதம் மூன்றாம் பாகத்தைக் காண ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.