பொறுப்புடன் இருங்க... ஒவ்வொரு உயிரும் முக்கியம்... வெற்றி பேரணியே தேவையில்லை - கம்பீர்

தாம் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது நடத்தப்பட்ட வெற்றி பேரணியை தாம் விரும்பியதில்லை என்றும்  கம்பீர் சுட்டிக்காட்டினார்.

பொறுப்புடன் இருங்க... ஒவ்வொரு உயிரும் முக்கியம்... வெற்றி பேரணியே தேவையில்லை - கம்பீர்

பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது நிகழ்ந்த  கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்த நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான வீதி நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என கம்பீர் வலியுறுத்தினார். 

அத்துடன், இந்த சம்பவத்துக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும், ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்றும் பாதுகாப்பாக சாலை நிகழ்ச்சியை நடத்த தயாராக இல்லை என்றால், அவற்றை நடத்தவே கூடாது என்றும் குறிப்பிட்டார்.

"சாலை நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இதற்கு நாம் அனைவரும் பொறுப்பு. நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிரும் முக்கியம். இனி இவ்வாறு11 உயிர்களை இழக்க முடியாது," என்று கம்பீர் கூறினார். 

அத்துடன், தாம் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது நடத்தப்பட்ட வெற்றி பேரணியை தாம் விரும்பியதில்லை என்றும்  கம்பீர் சுட்டிக்காட்டினார்.

2025 ஐபிஎல் பட்டத்தை அகமதாபாத்தில் வென்ற பிறகு,  ஆர்சிபி அணி பெங்களூருவில் ஒரு வெற்றி நிகழ்ச்சியை திட்டமிட்டிருந்தது. ஆனால், லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், போதிய பாதுகாப்பு மற்றும் முறையான திட்டமிடல் இல்லாததால் நிலைமை மோசமடைந்தது.

இந்த நிலையில்,  ஆர்சிபி அணி நிர்வாகம் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.