குஜராத்தில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் விழுந்தது! 240 பேரின் நிலை என்ன?

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் வியாழக்கிழமை பிற்பகல் கீழே விழுந்து நொறுங்கியது.

குஜராத்தில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் விழுந்தது! 240 பேரின் நிலை என்ன?

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் வியாழக்கிழமை பிற்பகல் கீழே விழுந்து நொறுங்கியது.

AI171 என்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதுடன், குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

விமான விபத்து நடந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆமதாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலண்டன் செல்லும் விமானம் என்பதால், வெளிநாட்டு பயணிகளும் விபத்தில் சிக்கியிருக்கலாம் என பதற்றம் நிலவியுள்ளது.

90 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழு ஆமதாபாத் விரைந்துள்ளதுடன், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லண்டன் செல்லும் விமான என்பதால் விமானத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆமதாபாத் விரைந்துள்ளார்.

பிரதமர் மோடி, இந்த விமான விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருடன் பேசியுள்ளார்.